India

பேனர் வைத்து குடிமக்களை அவமதிப்பதா? - உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் கண்டனம்!

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோவில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தின் போது பாஜகவினர் இந்துத்வ கும்பலை ஏவி போராட்டக்காரர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

அந்த சமயத்தில் பொது சொத்துகளை சேதம் விளைவித்த போராட்டக்காரர்களிடம் நஷ்ட ஈடு வசூலிக்கப்படும் என யோகி ஆதித்யநாத் அறிவித்தார். இதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டு லக்னோ மாவட்ட நிர்வாகத்தினர் சுமார் 53 பேரின் பெயர் புகைப்படங்களுடன் கூடிய பேனர்களை நகரின் பல்வேறு பகுதிகளில் வைத்தனர்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. பேனரில், பொது சொத்தை சேதப்படுத்தியதற்காக நஷ்ட ஈடு வழங்காவிடில் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எழுதப்பட்டிருந்தது. இதனைக் கண்டு எரிச்சலடைந்த அப்பகுதி மக்களிடையே பரபரப்பும், சர்ச்சையும் நிலவியது.

இதனால், தங்கள் அனுமதியின்றி, பொதுவெளியில் தங்களின் அடையாளங்களை வைத்துள்ளது கண்டனத்திற்குரியது என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கூறியுள்ளனர். மேலும், உத்தர பிரதேச அரசின் இந்த செயலால் வன்முறையாளர்கள் மேலும் எங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த பேனர் வைத்த விவகாரத்தை தாமாக முன்வந்து நேற்று விசாரித்தனர்.

அப்போது, உத்தர பிரதேச அரசின் தலைமை வழக்கறிஞர் பிரதாப் சிங் ஆஜராகி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பொதுநல மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

இதற்கு, இது தனிநபர் உரிமைகளை பறித்து, அவர்களது பாதுகாப்புக்கு பங்கம் விளைக்கும் செயல். இந்த நடவடிக்கை குடிமக்களை அவமதிக்கும் செயலாகும். எந்த அடிப்படையில் இவ்வாறு பேனர்கள் வைக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் லக்னோ போலிஸ் கமிஷ்னர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், உடனடியாக லக்னோ நகரில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றவும் உத்தரவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பான தீர்ப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கு வழங்கப்படவுள்ளது.