India
“டெல்லி வன்முறை குறித்து குற்றவியல் நீதித்துறை விசாரணை வேண்டும்” - திருமாவளவன் MP கோரிக்கை!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களில் பெரும் வன்முறை வெடித்ததில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறி, பெரும் சேதத்திற்கு வழிவகுத்த மத்திய பா.ஜ.க அரசும், டெல்லி காவல்துறையைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுமே இதற்குப் பொறுப்பு என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கூறியதாவது :
“டெல்லியில் யார் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. மதவெறி பிடித்த சக்திகள் வீதிகளில் துப்பாக்கி ஏந்தி வந்து போராடுகின்றவர்கள் மீது தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் தலையிட்டு ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கண்டித்த பின்னர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் தற்போது பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றங்களில் அரசியல் தலையீடு உள்ளதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
பா.ஜ.க முன்னணி தலைவர்கள் வன்முறைக்குக் காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் பெயர்களைச் சுட்டிகாட்டி ஏன் வழக்குப் பதியவில்லை என்று கேட்டதற்காகவே பஞ்சாப், அரியானா நீதிமன்றத்திற்கு தூக்கி வீசப்பட்டு இருக்கிறார்.
நீதித்துறையில் இந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தப் போக்கு கைவிடப்பட வேண்டும். டெல்லி வன்முறை முழுமையாக நிறுத்தப்பட்டு அமைதி திரும்ப வேண்டும்.
உயிர் பலிகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். டெல்லி கலவரத்திற்கு குற்றவியல் நீதித்துறை விசாரணை அமைக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!
-
"இனி என்னிடம் ஆலோசனை கேட்காதே" - ருத்துராஜிடம் கூறிய தோனி... பத்தினாத் வெளியிட்ட தகவல் !