India

’பாரத் மாதாகி ஜெய்’ சொல்பவர்கள் மட்டும் இங்கு இருக்கலாம் - சர்ச்சையை கிளப்பிய இமாச்சல் பா.ஜ.க முதல்வர்!

டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஷாஹீன்பாக் பகுதியில் இஸ்லாமியர்கள் ஜனநாயக வழியில் தங்களது உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, வடகிழக்கு டெல்லியிலும் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதனைப் பொறுத்துக்கொள்ளாத பா.ஜ.கவின் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள், போராட்டக்காரர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். இதனால், இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: "எப்போது FIR போடுவீர்கள்? நகரமே தீக்கிரையான பிறகா?” - டெல்லி போலிஸை விளாசிய ஐகோர்ட்!

டெல்லியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர், ப்ரவேஷ் வர்மா உள்ளிட்ட நால்வருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘பாரத் மாதாகி ஜெய்’ என கூறுபவர்கள் மட்டும் இந்தியாவில் இருக்கலாம். நாட்டை எதிர்த்து பேசுபவர்களையும், அரசியல் சாசனத்தை அவமதிப்பவர்களையும் சமாளிப்பதற்கான காலம் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார். இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.