India

“அழிவின் விளிம்பில் வோடஃபோன்” : ஜியோ வல்லாதிக்கத்தால் இந்திய பொருளாதாரத்திற்கு நேரும் ஆபத்து!

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையும், சில நிறுவனங்களை மட்டும் வளர்த்துவிடும் போக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்களை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை இந்தியாவில் இருந்தே காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. AGR எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமத்துக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தரவேண்டிய வருவாய்ப் பங்கீடே இந்த நஷ்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92,000 கோடி ரூபாய் AGR பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுமட்டுமின்றி, மோடியின் தயவால் சந்தைக்கு புதிதாக வந்த ஜியோ நிறுவனத்தால் ஏற்கெனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வந்த ஏர்டெல், வோடஃபோன்- ஐடியா, டாடா டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92,000 கோடி ரூபாய் தொகையைத் தராமல் இழுத்தடித்து வந்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 10,000 கோடி ரூபாயும், வோடஃபோன் - ஐடியா 2,500 கோடி ரூபாயும் செலுத்தியது.

53,000 கோடி ரூபாயைச் செலுத்தவேண்டிய வோடஃபோன் நிறுவனம் 2,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் எனத் தெரியவில்லை. வோடஃபோன் நிறுவனம் ஒருவேளை தனது நிறுவனத்தை இந்தியாவிலிருந்து காலி செய்தால் அது, இந்தியப் பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.

ஒரு பெரும் தனியார் முதலாளியின் வீழ்ச்சி எப்படி இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் எனக் கேட்டால், அதற்கான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகச் செயல்படும் வோடஃபோன் 37 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. இந்த சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை காட்டியே எஸ்.பி.ஐ வங்கியிடம் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுதவிர, பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, இந்துஸ்தான் - IndusInd, ஐசிஐசிஐ - ICICI, ஹெடிஎப்சி - HDFC உள்ளிட்ட வங்கிகளிடம் கடன் பெற்றுள்ளனர்.

மேற்கூறியபடி வோடஃபோன் - ஐடியா திவாலானால் அதன் சொத்துகளை பறிமுதல் செய்து வங்கிகள் குறைவான தொகைக்கு ஏலத்தில் விடும். அந்த தொகை முழுமையான கடன் தொகைக்கு ஈடாகுமா என்பது கேள்விக்குறியே.

அடுத்ததாக, மூடப்படும் இந்த நிறுவனத்தால் நேரடியாக 13,500 ஊழியர்கள் உடனடி வேலையிழப்பைச் சந்திப்பார்கள். இதைத் தவிர மறைமுகமாக ஏராளமானோரும் தங்களின் வேலையைப் பறிகொடுக்கவேண்டியது வரும்.

தற்போதுள்ள சூழலில் வோடஃபோன் திவால் நிலைக்குச் சென்றால், இந்தியாவின் நிதிப்பற்றாக்குறையும் 40 புள்ளிகள் கீழிறங்கிச் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்பு சந்தை 4 நிறுவனங்களாகச் சுருங்கியுள்ள நிலையில், மேலும் 2 நிறுவனங்களாகச் சுருங்கும். அதன் மூலம் ஜியோ நிறுவனம் தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி மேலும் ஏர்டெல் நிறுவனத்தினை காலி செய்யும் முயற்சிக்கும்.

ஒருவேளை 2 நிறுவனங்கள் மட்டும் சந்தையில் இருந்தால் தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம். அந்த நிறுவனம் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிடும். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் என்ற அமைப்பே தனது செல்வாக்கை இழந்து இல்லாமல் போகும்.

தொலைத்தொடர்புத் துறையில் வேறு எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவிற்கு வராது. இது இந்தியாவிற்குக் கிடைக்கும் வருவாய் வளர்ச்சியை மேலும் சிதைக்கும். இந்த நிலைக்கு ஜியோவின் அசுர வளர்ச்சியே முழுமுதற் காரணம்.

மத்திய அரசின் உதவியுடன் பிரதமர் மோடியையே விளம்பர மாடலாக வைத்து களமிறங்கிய ஜியோ, பிற நிறுவனங்கள் அளித்துவந்த கட்டணத்தை தலைகீழாகத் திருப்பிப்போடும் அளவிற்குக் கட்டணத்தை பல மடங்கு குறைத்தது.

ஜியோ சேவை பிரதமர் மோடியினுடையது என்ற வகையிலேயே மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டதோடு, மத்திய அரசுடனான இணக்கத்தைப் பயன்படுத்தி ஜியோ, பல கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி தனியார் நிறுவனமான ஜியோவிற்கு வழங்கிய சிறப்பு அனுமதியைக் கூட மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு இந்த அரசாங்கம் வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது, தொலைத்தொடர்புத் துறையில் ஜியோவின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தவே பயன்படும் என்பதே அறிஞர்களின் கருத்தாக இருக்கிறது.

Also Read: அடுத்தடுத்து விலையை ஏற்றி வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் : ஏன் ? எதற்கு ?