India

மோடி அரசுக்கு ரூபாய் 10,000 கோடி செலுத்திய ஏர்டெல் - நிதிச்சுமையை வாடிக்கையாளர் தலையில் ஏற்றுமா?

மத்திய அரசு, புதிய தொலைத்தொடர்பு கொள்கையை அமல்படுத்தி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது வருவாயில் குறிப்பிட்ட பகுதியை அரசுக்கு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டது.

அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது.

அதனை மறு ஆய்வு செய்யக்கோரி மீண்டும் ஒரு மனுவை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாங்கள் செய்த நிலையில் அந்த மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவையும் கடந்த ஜனவரி 15ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நிலுவையை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.47 லட்சத்தை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த உத்தரவிட்டுவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் கோரி வோடஃபோன், ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்கள் மற்றுமொரு புதிய மனுவை தாக்கல் செய்தன. அந்த புதிய மனு, உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 14ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது தீர்ப்பில் நீதிபதி அருண் மிஸ்ரா, அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏ.ஜி.ஆர் கட்டணத்தை செலுத்தவேண்டும் எனவும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாரதி ஏர்டெல், பாரதி ஹெக்ஸகாம் மற்றும் டெலினார் நிறுவத்தின் சார்பாக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை இன்று செலுத்தியுள்ளனர். இதுதொடர்பாக ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நிறுவனத்தின் சுயமதிப்பீட்டுக் கணக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்தின் அடுத்த விசாரணைக்கு முன்பாகவோ அல்லது விசாரணைக்குப் பிறகு மீதமுள்ள நிலுவைத் தொகையை முறையாகச் செலுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

ரூ.35,586 கோடி நிலுவைத் தொகையை தரவேண்டிய பார்தி ஏர்டெல் நிறுவனம் 10 அயிரம் கோடி ரூபாயை முதல் தொகையாக அரசுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனெவே ஏர்டெல் நிறுவனம் அறிவித்த சேவைக் கட்டணத்தில் இருந்து விலையை உயர்த்தியுள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமங்களை சந்தித்துவரும் வேளையில், அரசுக்கு செலுத்தவேண்டிய தொகையால் மேலும் தனது நிதிச் சுமையை வாடிக்கையாளர் தலையில் சுமத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “அரசு இதைச் செய்யாவிட்டால் சேவைகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” : வோடஃபோன் ஐடியா சேர்மன் வேதனை!