India

“பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை - 15,650 பேர் மீது வழக்குப் பதிவு” : கேரள அரசு அதிரடி!

கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தி வெற்றியும் அடைந்துள்ளது. குறிப்பாக திட்டங்களை செயல்படுத்துவதற்கென ஒரு துறையை அமைத்து அதை நடைமுறைப்படுத்தும் பணிகளில் முழுவீச்சில் கேரள அரசு இறங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒரு சட்டத்தை அரசு பின்பற்றவேண்டிய அனைத்தையும் கேரள அரசு பின்பற்றி வருகிறது. அந்த வகையில், வயதான பெற்றோரை கவனிக்காமல் தனியாகத் தவிக்கவிட்ட பிள்ளைகள் மீது வழக்குப் பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு.

இந்த சட்டத்தைக் கையில் எடுத்தக் கேரள அரசு பெற்றோரை கவனிக்காதவர்கள் பற்றிய தகவல்கள் மற்றும் போலிஸ் புகார் ஆகியவற்றைக்கொண்டு பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் என 15,650 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த தகவலை அம்மாநில சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கேரளாவில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாக புகார் எழுந்தது. அதன் படி எடுக்கப்பட்ட நடவடிக்கையின் படி, கடந்த 4 ஆண்டுகளில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் 15,650 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக 2016 - 2017ல் 4767 வழக்குகள், 2017 -2018ல் 3356 வழக்குகள், 2018 - 2019ல் 4300 வழக்குகள், 2019-2020ல் இதுவரை 3227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் பெரிய மாற்றம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “எங்கு வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம்; புகார்தாரரிடம் உயரதிகாரிகள் பேசுவார்கள்”: கேரள அரசு புதுதிட்டம்!