India

“இடஒதுக்கீடு கொள்கையில் நெருக்கடியை உருவாக்குகிறது சங்பரிவார் கும்பல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

அரசுப் பணிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், பதவி உயர்வு, பணி ஆகியவற்றை இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கத் தேவையில்லை எனவும் பொதுநல வழக்கு ஒன்றின் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன. இந்நிலையில், இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூறி, தி.மு.க., சி.பி.ஐ, சி.பி.ஐ.எம், ஐ.யூ.எம்.எல்., உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தின.

இது தொடர்பாக ஃபேஸ்புக் பதிவின் மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்து இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசில் உள்ள அமைச்சர்களும், அந்த மத்திய அரசை அனைத்து வகைகளிலும் கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகள் பல்வேறு குழப்பங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் வித்திட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் - சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், பாதுகாத்திட மத்திய பா.ஜ.க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: SC,ST பிரிவினருக்கு அரசு துறையில் இடஒதுக்கீடு இருக்கிறதா? இல்லையா? - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?