India

வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் மீது பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு-காஷ்மீரில் அராஜகம்!

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை பிறப்பித்தது.

மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை விடுதலை செய்யும் நோக்கமே இல்லாமல் மோடி அரசு விடுதலைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே 6 மாதகாலமாக வீட்டுக்காவலில் உள்ள ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட 3 பேர் மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியுள்ளார். பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு எதிராக குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்படுவர்களை கைது செய்து 2 வருடங்கள் கூட காவலில் வைக்க அனுமதி உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களை எதற்காக கைது செய்கிறோம் என அறிக்கை கூட அரசு அளிக்கத் தேவையில்லை.

முன்னதாக காஷ்மீர் பிரிக்கப்படுவதற்கு முன்பே முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் காவலில் இருக்கவேண்டிய கால அவகாசத்தை நீட்டித்த மத்திய அரசு தற்போது உமர் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அடையாளம் தெரியாமல் மாறிப்போன உமர் அப்துல்லா : காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் !

கடந்த 2007 மற்றும் 2016-ம் ஆண்டுக்கிடையே பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்படி 2,400 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 58 சதவீத வழக்குகள் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தனிநபர் கருத்து சுதந்திரத்தை காக்க வேண்டியது அரசின் கடமை” - காஷ்மீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் ஆணை!