India

”காந்தி படுகொலையை மறக்கமாட்டோம்” : பா.ஜ.கவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை வடிவமைத்த கேரள அரசு!

மத்திய பா.ஜ.க அரசின் தவறான சட்டங்களையும், சில அவசர நடவடிக்கைகளையும் தொடர்ந்து கேரள அரசு விமர்சித்து வருகிறது. குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் முதல் மிகப்பெரிய போராட்டங்களை வரை கேரளாவை ஆட்சி செய்யும் இடதுசாரி அரசு செய்து வருகிறது.

சமீபத்தில் காந்தியின் நினைவு நாளன்று காந்தி குறித்து பல்வேறு வதந்திகளும், தவறான தகவல்களையும் இந்துத்வா ஆதரவு கும்பல் மற்றும் பா.ஜ.க அமைச்சர்களே சிலர் செய்து வந்தனர்.

இதுபோல தவறான செய்திகளை பரப்பி, வரலாற்றை திரித்துக் கூறும் பா.ஜ.கவினருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கேரள அரசு, சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தின் போது வழங்கிய பட்ஜெட் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் காந்தி படுகொலையை சித்தரிக்கும் வகையில் உள்ள வரைபடத்தை இடம்பெறச் செய்துள்ளனர்.

இந்த பட்ஜெட் புத்தகம் தொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைராகப் பரவி வருகிறது. பலரும் கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களின் வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக அம்மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், “டாம் வட்டக்குழி வரைந்த மகாத்மா காந்தியின் படுகொலை ஓவியத்தை பட்ஜெட் புத்தகத்தில் இடம்பெறச் செய்தது எங்கள் அரசியல் நிலைப்பாடு. நாங்கள் காந்தியின் படுகொலையை மறக்க மாட்டோம். இன்று வரலாறு மாற்றி எழுதப்பட்டு வரும் சூழலில் உண்மைச் சம்பவங்களை நினைவுகூருவது ஒரு வரலாற்றுக் கடமையாகும்.

அதுமட்டுமின்றி பல முக்கிய சம்பவங்களை மறக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் செய்துவருகிறது. என்.ஆர்.சி மூலம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த முயற்சித்தால் கேரள ஒன்றுப்பட்டு நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஏர் இந்தியா தடுமாறியது எப்படி” : RTI தகவல் மூலம் மோடி அரசின் சதி அம்பலம்!