India

“வரலாற்றை மாற்றும் முயற்சிகளை பா.ஜ.கவினர் கைவிட வேண்டும்” - மக்களவையில் முழங்கிய கனிமொழி எம்.பி!

“வரலாற்றை மாற்றும் முயற்சியை பா.ஜ.கவும் அதன் தலைவர்களும் கைவிடவேண்டும்” என்று கனிமொழி எம்.பி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் இன்று தி.மு.க மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “ரிக் வேதத்தில் உள்ள சரஸ்வதி நதியை சிந்து சமவெளி நாகரீகத்தோடு இணைத்து வரலாற்றை மாற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முயற்சித்துள்ளார். இதுபோன்ற முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்து ஒரு வரி கூட பட்ஜெட்டில் பேசப்படவில்லை. பயிர்க்காப்பீட்டு இழப்பாக 5 ரூபாய், 10 ரூபாய் தான் வழங்கப்பட்டுள்ளது. இதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்திலும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது சமூக நீதி கொள்கைகளுக்கு எதிரானது. நன்றாகச் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி-யை தனியாருக்கு விற்பது தேவையற்றது. இந்த முயற்சியை பா.ஜ.க அரசு கைவிட வேண்டும். இதனால் பலர் வேலை இழக்க நேரிடும். ஏற்கனவே, வேலைவாய்ப்பில் நாடு 45 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.

எளிமையாக தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் சிறு நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன.

தீப்பெட்டிக்கான ஜி.எஸ்.டியை 18% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும்.” என வலியுறுத்திப் பேசினார்.

Also Read: “சொல்வது ஒன்று; செய்வது ஒன்று” - மக்களவையில் பிரதமர் மோடியை சாடிய டி.ஆர்.பாலு எம்.பி!