India

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : சீனாவில் இருந்து தாயகம் திரும்பிய 324 இந்தியர்களில் 53 பேர் தமிழர்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவி அந்நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வூஹான் பகுதியில் சிக்கியிருந்த 324 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்காக டெல்லி ராம் மனோகர் மருத்துவனையை சேர்ந்த 5 மருத்துவர்கள் குழுவுடன் சீனா சென்ற ஏர் இந்தியா விமானம் இன்று காலை தலைநகர் டெல்லியில் தரையிரங்கியது.

தாயகம் மீட்டு வரப்பட்டவர்களில் யாருக்கேனும், வைரஸ் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அது, கேபின் குழுவினர், விமானிகள் மற்றும் சக பயணிகளுக்கும் கடுமையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தாயகம் திரும்பிய அனைத்து இந்தியர்களும், விமானிகளும், மருத்துவ குழுவினரும் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

சீனாவில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட 324 பேர் கொண்ட குழுவில் 53 தமிழர்கள் உள்ளனர். தொடர்ந்து, இன்று சீனாவுக்கு மற்றொரு சிறப்பு விமானமும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி அழைத்துவரப்பட்ட 324 பேரில் 221 பேர் ஹரியானவில் உள்ள மனேசர் முகாமிலும், 103 பேர் டெல்லி அருகே உள்ள எல்லை பாதுகாப்புப்படையின் சாவ்லா முகாமிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எந்த நோய்த் தொற்று ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான மருத்துவர்கள் குழு அவர்களை முழுமையாக கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தீவிர கண்காணிப்பில் 10 பேர்!