India

“மகாத்மா காந்தி பெயரை தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறார் மோடி” - குற்றம்சாட்டும் ராமச்சந்திர குஹா!

பிரதமர் மோடி தன்னை வளர்த்துக்கொள்ள மகாத்மா காந்தியின் பெயரை தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாக வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அகமாதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராமச்சந்திர குஹா, “மோடி 2014ல் பிரதமராவதற்கு முன்பாக காந்தியை நேசித்தாரா? தன்னை வளர்த்துக்கொள்வதற்காக மகாத்மா காந்தியின் பெயரை துஷ்பிரயோகம் செய்தார் மோடி.

மகாத்மா காந்தி உயிருடன் இருந்திருந்தால் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிச்சயம் எதிர்த்திருப்பார். காந்தியை தவறாக மேற்கோள் காட்டி மக்களை ஏமாற்றுகிறார் பிரதமர் மோடி.

அரசும், நீதித்துறையும் அகிம்சை வழியைத்தான் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவின் இரண்டு முக்கியமானவர்களின் பேச்சிலும் வன்முறையே தொனிக்கிறது. ஷாஹின்பாக் போராட்ட பெண்களைப் பற்றி நம் உள்துறை அமைச்சரின் கருத்து மோசமானது.

எந்தவொரு நாகரிகமான ஜனநாயக நாட்டிலும் அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். உள்துறை அமைச்சரே இப்படிப் பேசுவதால் அவருக்குக் கீழ் இருப்பவர்கள் அதை விடவும் மோசமாகப் பேசி வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.