India

22 குழந்தைகளை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தவன் சுட்டுக்கொலை : சினிமா பாணியில் நடந்த கமாண்டோ ஆபரேஷன்!

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் அருகில் உள்ள கசாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் பாதம். கொலை வழக்கில் தொடர்புடைய இவர், தனக்கு பிறந்தநாள் என்று கூறி அக்கம்பக்கத்தினரை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைத்துள்ளார்.

சுபாஷ் பாதமை நம்பி 22 குழந்தைகள் உட்பட பெண்களும் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டின் அடித்தளத்தில் உள்ள அறையில் சுபாஷ் பாதம் அடைத்துவைத்துள்ளார்.

அப்போது, குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஃபரூக்காபாத் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சுபாஷ் பாதமிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, தன்னை சதிசெய்து கொலை வழக்கில் சிக்கவைத்து விட்டதாக சுபாஷ் கூறியுள்ளார். இதனிடையே சுபாஷ் பாதமை பிடிக்க போலிஸார் முயன்றபோது தன்னிடம் 30 கிலோ வெடிகுண்டு இருப்பதாகவும், போலிஸார் பிடிக்க முயற்சித்தால் வெடிக்கவைத்துவிடுதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலிஸார், தேசிய பாதுகாப்பு படையான கமாண்டோ படைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். பிணைக்கைதிகளை காப்பாற்ற கமாண்டோ படை முயற்சித்தபோது துப்பாக்கியால் சுபாஷ் சுட ஆரம்பித்துள்ளான்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். பின்னர் 8 மணிநேரம் போராடி கமாண்டோ படையினர் சுபாஷ் பாதமை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சுபாஷ் பாதம் சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவரின் பிடியில் இருந்த 22 குழந்தைகள் பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்தப் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிசு அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: சல்லிசல்லியாக நொறுங்கிய நீர்த்தேக்கத் தொட்டி... கட்டி முடித்த 4 ஆண்டுகளில் சோகம்! - வைரலாகும் வீடியோ