India

ஒரு பேருந்து செல்லக்கூட வழியில்லாத புதிய பாலம் : அ.தி.மு.க பேனரால் சிக்கிக்கொண்ட அரசுப் பேருந்து!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு பாலத்தை மட்டும் கட்டிமுடித்த அ.தி.மு.க அரசு, காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்து 1.75 கி.மீ தூரத்திற்கு இரண்டாவது அடுக்கு மேம்பாலம் பணியை மேற்கொண்டது.

100 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டிமுடிக்கப்பட்ட மேம்பாலம் செங்குத்தாகவும், மிக உயரமாகவும் கட்டப்பட்டதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் முன்பே குற்றச்சாட்டினர். இந்த பாலத்தை விண்வெளிப்பாலம் எனவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், மேம்பால பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பிறகு இந்தப் பாலத்தை நேற்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

முதல்வர் திறந்துவைத்ததுமே அமைச்சர் வேலுமணி கொடி அசைத்து போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். அமைச்சர் கொடி அசைத்ததும் புறப்பட்டுச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று பாலத்தின் மறுபுறத்தில் போதுமான வழி இல்லாததால் வெளியேறமுடியாமல் நின்றது.

உடனே தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பாலத்தின் திறப்பு விழாவிற்காக வடிவமைக்கப்பட்ட பேனர் மற்றும் அலங்கார வளைவுகளை தள்ளிவைத்து பேருந்து செல்ல ஏற்பாடு செய்தனர்.

மேம்பாலம் முடியும் இடத்தில் இருந்த தடுப்புச் சுவர் குறுகலாக இருந்ததாலும், அதிலும் பேனர் கட்டி அலங்கார வளைவு அமைத்ததுமே பேருந்து எளிதாக செல்லமுடியாததற்கு காரணம் எனக் கூறப்பட்டது.

அரசு கட்டிய பாலம் ஒரு பேருந்துகூட எளிதில் சென்றுவரமுடியாத நிலையில் அமைந்துள்ளதாகவும், இதனால் அதிக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

Also Read: பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : பா.ம.க நிர்வாகி போக்சோவில் கைது!