India

3வது மாநிலமாக CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது ராஜஸ்தான் அரசு : கலக்கத்தில் மோடி அரசு!

பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தனது சட்டசபையில் முதன்முதலாக தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் அந்த தீர்மானம் வலியுறுத்தியது.

அதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கொண்டுவரும்போது பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால் தீர்மானம் நிறைவேற்ற போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால் கடும் அமளிக்கு மத்தியில் காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடைவிதிக்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் தங்கள் மாநிலங்களில் CAA-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி வருவது பா.ஜ.கவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #CAA-வுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் : மம்தா பானர்ஜி உறுதி!