India

CAAவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு - 143 மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் : உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு அகதிகளாக வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.

மேலும், இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற உத்தரவிடக் கோரியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்தும் பல்வேறு கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அனைத்து மனுக்களும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என வாதங்களை முன்வைத்தார்.

அவரது வாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: #CAA-வுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் : மம்தா பானர்ஜி உறுதி!

அதுமட்டுமின்றி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே சரியாக இருக்கும் என தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்களும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.