India

“ஜியோவின் கொட்டத்தை அடக்க ஏர்டெல் - வோடஃபோன் போடும் மாஸ்டர் பிளான்” - மாட்டிக்கொண்டது யார்?

இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களை, முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முந்தி தொலைத் தொடர்பில் தனது தடத்தைப் பதித்தது.

அதன்பிறகு, சமீபத்தில் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் சந்தையில் நிலைத்து நிற்க தங்களின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக அறிவித்து தனது தொலைத்தொடர்பு சேவைக்கான கட்டணத்தை 42 சதவீதம் வரை உயர்த்தினர். இதனையடுத்து ஜியோ நிறுவனமும் தனது கட்டணத்தை உயர்த்தியது.

இந்த தொலைத்தொடர்பு போட்டியில் ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களை முந்திச்சென்ற ஜியோ தற்போது பின்னடைவைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதற்கு ட்ராய் (இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) வெளியிட்ட அறிவிப்பே காரணம் என ஜியோ தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்பாக, ஐயூசி (IUC - interconnect usage charges) எனப்படும் கட்டணம் என்பது வெறு ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இருந்துவரும் அழைப்பை ஏற்றுக் கொள்வதற்காக வசூலிக்கப்படும் கட்டணமாகும்.

அதாவது ஜியோவில் இருந்து ஏர்டெல்லுக்கு யாராவது வாடிக்கையாளர் தொடர்புகொண்டு பேசினால் அதற்காக ஜியோ நிறுவனத்திடம் இருந்து ஏர்டெல் நிறுவனம் கட்டணம் வசூல் செய்துகொள்ளலாம். ஆனால் இந்த கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் என ஆரம்பகாலத்தில் இருந்து ஜியோ கோரிக்கை வைத்து வருகிறது. மறுபுறம் இந்தக் கட்டண சேவைக்கு ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஜியோ அழைப்பில் இருந்து அதிகமான அழைப்புகள் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மொபைல்களுக்கே செல்கின்றன. இதனை ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன.

Also Read: அடுத்தடுத்து விலையை ஏற்றி வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் : ஏன் ? எதற்கு ?

முன்னதாக, ட்ராய் நிறுவனம் ஐயூசி கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதற்கு ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனையடுத்து 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து ஐயூசி கண்டனம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதுவரை ஒரு நிமிட அழைப்புக்கு 6 பைசாவை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூல் செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்தது. இதனால் கடந்த சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் கூடுதல் வருவாய் பெறும். ஜியோவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிறுவனங்களின் லாபவெறி போட்டியில் சாமானியர்கள் தான் பலிகடாவாகியுள்ளனர். குறிப்பாக சேவைக் கட்டணத்தை அதிகரித்து, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நஷ்டத்தை சாமானியர்களின் தலை மீது ஏற்றுகிறார்கள் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Also Read: அடுத்தடுத்து விலையை ஏற்றி வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் : ஏன் ? எதற்கு ?