India

“மோடி ஆட்சியில் அதிகரித்த வாராக்கடன்” : 9.3 லட்சம் கோடி ரூபாயில் வரவிருப்பது வெறும் 54,000 கோடிதானா?!

இந்தியாவில் இயங்கி வந்த முன்னணி பெருநிறுவனங்கள், பல கோடி ரூபாய் கடன் பெற்று வங்கிகளுக்குச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளன. இதனையடுத்து நிதிச் சுமையில் சிக்கி இருந்த வங்கிகளுக்கு கடனை செலுத்தாமல் இழுத்தடித்துவந்த 4 நிறுவனங்கள் மீதான மோசடி வழக்குகளை வங்கி மோசடி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு வங்கி மோசடியில் ஈடுபடுவதை தடுக்கவும், வங்கிகளுக்கு வாராக்கடன் பிரச்னையை ஏற்படுத்திய பெரிய நிறுவனங்களிடம் இருந்து தீர்வு எட்டப்படுவதற்காகவும் வங்கி மோசடி நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதுவரை அந்த வங்கி மோசடி நீதிமன்றம் 15% வழக்குகளுக்கு மட்டுமே தீர்வை எட்டியுள்ளது. பல வங்கிகள் தொடுத்த வழக்குகள் விசாரணையிலேயே உள்ளன.

இந்நிலையில், எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா லிமிடெட், பிரயாக்ராஜ் பவர் ஜெனரேஷன் கம்பெனி, ருசி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ரத்தன் இந்தியா பவர் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் பல மடங்கு கடன் வாங்கிவிட்டு வங்கிகளுக்கு திவால் நோட்டீஸ் அளித்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கிகள் வங்கி மோசடி நீதிமன்றத்தை நாடி வழக்குத் தொடர்ந்தனர். அதன்படி அந்த வங்கிகள் தொடர்ந்த வழக்கை வங்கி மோசடி நீதிமன்றம் விசாரித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், எஸ்ஸார் ஸ்டீல் இந்தியா லிமிடெட் 41,500 கோடி ரூபாயும், பிரயாக்ராஜ் பவர் ஜெனரேஷன் கம்பெனி 5,400 கோடி ரூபாயும், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் 4,350 கோடி ரூபாயும் மற்றும் ரத்தன் இந்தியா பவர் லிமிடெட் 2,700 கோடி ரூபாயும் வங்கிகளுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் 54,000 கோடி ரூபாய் பணம் வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கும்.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு வங்கி வாராக்கடன் பிரச்னையும் ஒரு பெரிய காரணமாக உள்ளது. இந்த தீர்ப்பு மூலம் சுமார் 54,000 கோடி ரூபாய் பணம் வங்கிகளுக்கு திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பி.எம்.சி வங்கி நடவடிக்கையால் இன்னொரு உயிரிழப்பு... அறுவை சிகிச்சைக்கு பணம் பெறமுடியாமல் முதியவர் மரணம்!

மேலும், “அந்த பணம் அளிக்கப்பட்டாலும் மீண்டும் எதற்காக அந்த தொகை செலவு செய்யப்படும் என்பது கேள்வியாக எழுந்துள்ளது. குறிப்பாக, அரசு வங்கிகளில் மட்டும் மொத்த வாராக்கடன் 9.3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 9.23 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வாராக்கடன் விகிதம் கடந்த மார்ச் மாத முடிவில் 11% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பினால், வங்கிகளின் செயல்பாட்டில் உத்வேகம் ஏற்படக்கூடும். ஆனால் இந்தியப் பொருளாதாரம் மேம்படுவதற்கான சாத்தியமில்லை” எனத் தெரிவித்தார்.