India

கேரளாவில் செல்போன் திருடியதாக இளைஞர் அடித்து கொலை - விசாரணையில் வெளிவந்தஅதிர்ச்சி தகவல்!

கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மது என்ற நபரை அரிசி திருடியதாகக் கூறி கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் மீண்டும் ஒரு கும்பல் வன்முறை நடைபெற்றுள்ளது. திருவல்லம் பேருந்து நிலையத்தில் மலப்புறம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது கைப்பையை ஒருவர் திருடிச் சென்றதாக அருகே இருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூறியுள்ளார்.

மேலும், அந்த கைப்பையில் பணம், பாஸ்போர்ட், மொபைல் ஃபோன் என அனைத்தும் இருந்ததாகவும் கூறி திருடிய நபர் குறித்த அடையாளங்களையும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் விளக்கியுள்ளார்.

கைதான ஆட்டோ ஓட்டுநர்கள்

இதனையடுத்து, அந்த நபரை தங்களுக்கு தெரியும் என கூறி முட்டக்காடு பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்ற நபரை ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேர் உட்பட ஐவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆனால், திருடியது அவர் தான் என்பது அவர்களுக்கு உறுதியாகத் தெரியாது.

பின்னர், அஜீஸை ஒரு வீட்டிற்குள் அழைத்துச் சென்று அடித்து உதைத்தது மட்டுமல்லாமல் அந்த நபரின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்கு பிறகு திருவல்லம் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் அஜீஸின் உடலை தூக்கி எறிந்துள்ளனர்.

இதற்கு பிறகு அந்த பகுதியில் ஆணின் சடலம் ஒன்று இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சம்பவ இடத்துக்கு போலிஸார் விரைந்தனர். அஜீஸின் உடலை மீட்டு பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணையில் ஈடுபட்ட திருவனந்தபுரம் போலிஸாருக்கு மேற்குறிப்பிட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது. மேலும், கும்பல் தாக்குதல் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மூவரையும் போலிஸ் கைது செய்துள்ளதாகவும் எஞ்சிய இருவரை தேடும் பணி தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி இளைஞரை திருடன் என தவறாக எண்ணி வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.