India

”Make in India அல்ல; Rape in India” : கருத்துக்கு மன்னிப்புக் கோரமுடியாது” - ராகுல் திட்டவட்டம்!

இந்தியாவில் தொடரும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, ”பிரதமர் மோடி ‘Make In India’ திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கு ‘Rape In India’-வாகத் தான் இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏவால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் வாகன விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அந்த சம்பவம் குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை.

மேலும், மோடி பேசும் இடங்களில் எல்லாம் ’பெண்களைப் பாதுகாப்போம்’ என்று அறைகூவல் விடுக்கிறார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைப் காப்பது என்பதனை அவர் கூறவில்லை. குறிப்பாக பா.ஜ.க-வினரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.

Also Read: “வன்முறையை நம்பும் அரசால்தான் மக்களே சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்” : ராகுல் காந்தி ஆவேசம்!

ராகுலின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி., கனிமொழி, “ Make in India என மோடி கூறினார்; ஆனால், நாட்டில் என்ன நடக்கிறது? பாலியல் குற்றங்கள் தான் நிகழ்கின்றன. இதைத்தான் ராகுல் காந்தி வெளிப்படுத்தியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க-வினரின் எதிர்வினைகளுக்கு பதிலளித்துப் பேசிய ராகுல் காந்தி, “நான் கூறிய கருத்துக்காக யாரிடமும் மன்னிப்பு கோரப்போவதில்லை. குறிப்பாக நாட்டில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இந்த பிரச்னையிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே பா.ஜ.க-வினர் இதைச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.