India

தொலைத்தொடர்பு துறையிலும் எதிரொலித்த பொருளாதார சரிவு : வீழ்ச்சியை ஒப்புக்கொண்ட பா.ஜ.க அரசு!

மத்திய அரசு, புதிய தொலைத்தொடர்பு கொள்கையை அமல்படுத்தி, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருவாயில் குறிப்பிட்ட பகுதி தொகையை அரசுக்கு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இதனால் மத்திய அரசின் வருவாய் அதிகரிக்கும் என பா.ஜ.க-வினர் கூறிவந்தனர். இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களையில், தொலைத்தொடர்பு கொள்கை மூலம் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.

அதற்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர பிரசாத் எழுத்துப்பூர்வ பதில் ஒன்றை அளித்தார். அந்தப் பதிலில், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள தகவலின் படி, தொலைத் தொடர்பு சேவைத் துறையின் 2018 - 2019ம் ஆண்டுக்கான வருவாய் 1,44,681 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.

இது 2017-18ம் ஆண்டில் 1,55,680 கோடி ரூபாயாக இருந்தது. இதன் மூலம் 7.06 சதவீதம் வருவாய் குறைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2017 - 2018ம் ஆண்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு பயனாளர் மூலம் சராசரியாக 124.85 ரூபாய் வருவாய் கிடைத்துவந்தது. ஆனால் இதுவே கடந்த 2019ம் நிதியாண்டில் 71.39 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், தொலைத் தொடர்பு அமைச்சரவை செயலர் தலைமையில் செயலாளர்கள் குழு அமைக்கப்பட்டு தொலைத்தொடர்புத் துறை தொடர்பான பிரச்னைகளைபரிசீலித்து வருகிறோம். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சந்திப்பதாக தெரிவித்தனர்.

Also Read: செல்போன் நிறுவனங்களுக்கு சலுகை; பாஜகவுக்கு அளித்த தேர்தல் நன்கொடைக்கு நன்றிக் கடனா? - காங்கிரஸ் கேள்வி?

அதன் அடிப்படையில், 2020-21 மற்றும் 2021-22ம் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான அலைவரிசை கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், மத்திய அரசே தொலைத்தொடர்புத் துறை வீழ்ச்சி அடைந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது தெளிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.