India

“இது சட்டத்திற்குப் புறம்பான மசோதா; இன்று துயரமான நாள்” : மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு!

அரசியல் சாசன விதிகளை மீறி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க, காங்கிரஸ், தேசியவாத காங், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கக் கூடாது. குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனையின்றி உருவாக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் தவிர இலங்கை, பூடான் உள்ளிட்ட நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்? அனைத்து மதத்தினரையும் சமமாகப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லப்போவது யார்? இந்த மசோதா மூலம் மத்திய அரசு, இந்துத்துவாவை நோக்கிச் செல்கிறது. இன்றைய தினம் ஒரு துயரமான நாள்” எனத் தெரிவித்தார்.

Also Read: "குடியுரிமைச் சட்ட மசோதாவை வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்” - மாநிலங்களவையில் வைகோ ஆவேச பேச்சு!