India

43 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த டெல்லி தீ விபத்து : உரிமையாளரைக் கைது செய்து போலிஸ் விசாரணை

மத்திய டெல்லியின் பரபரப்பான பகுதியான, ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டி என்ற பகுதியில் பல்வேறு விதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. டெல்லியின் முக்கியமான தொழிற்சாலைப் பகுதியாக இது அறியப்படுகிறது.

இந்நிலையில், அங்கு இயங்கி வந்த பை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை 5 மணியளவில், பை தயாரிக்கும் இயந்திரம் இருந்த பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் இருந்த தொழிற்சாலைகளுக்கும் பரவியது.

அதிகாலை நேரம் என்பதால் தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதால், அதிக புகை அந்தப் பகுதியை சூழ்ந்துள்ளது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.

உயிருடன் மீட்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் எல்.என்.ஜே.பி, ஆர்.எம்.எல் மருத்துவமனை மற்றும் இந்து ராவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சுமார் 50 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

டெல்லியில் நிகழ்ந்த இந்த தீ விபத்து, பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தனருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், தீ விபத்து நடந்த தொழிற்சாலை தீயணைப்புத்துறையிடம் அனுமதி பெறாமலேயே இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த தொழிற்சாலை உரிமையாளர் ரெஹான் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.