India

“பாலியல் வன்முறைகளின் தலைநகரமான உன்னாவ்” : 11 மாதங்களில் 185 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவு!

கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான 11 மாதங்களில் நாட்டிலேயே அதிகமாக 86 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில் உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம் பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக மாறியிருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சுமார் 63 கி.மீ தொலைவிலும், கான்பூரிலிருந்து 25 கி.மீ தொலையிலும் அமைந்துள்ளது உன்னாவ் மாவட்டம். இந்த கிராமத்தில் சுமார் 31 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இங்கு 86 பாலியல் வல்லுறவு வழக்குகள் மட்டுமின்றி, சுமார் 185 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஊடகங்களில் வெளியான இரண்டு மிக முக்கிய பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் உன்னாவ் மாவட்டத்தில் தான் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த குல்தீப் சிங் செங்கார் பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயன்ற விவகாரம் மற்றும் நீதிமன்றத்தில் சாட்சி கூறச் சென்ற இளம்பெண்ணை ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து எரித்துக் கொன்ற சம்பவம் ஆகியவை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட சிறிது நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து விடுவதாகவும் அதில் சிலர் தலைமறைவாகிவிடுவதாகவும் வழக்கில் பதிவு செய்துள்ளனர்.

மேலும் சில குற்றவாளிகளுக்கு காவல்துறையைச் சேர்ந்தவர்களே ஆதரவாக செயல்படுவதாகவும் உன்னாவ் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ராகவ் ராம் ஷுக்லா கூறுகையில், ”உன்னாவ் காவல்துறை நிர்வாகம் முற்றிலும் சீர்கெட்டுப் போயுள்ளது. அரசியல் அதிகாரம் பெற்றவர்களுக்கு அனுமதி அளிக்காமல் போலிஸார் எந்த விசாரணையிலும் ஈடுபடமாட்டார்கள். அதனால் தான் குற்றச்செயலில் ஈடுபடுவோர் எந்த பயமும் இல்லாமல் குற்ற சம்பவங்களைத் தொடர்ந்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி முதலிடம் வகிப்பது வெட்கக்கேடானது: மோடி அரசு மீது பிரியங்கா காட்டம்!

குறிப்பாக, மாநிலத்தின் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய அரசியல் தலைவர்கள் உன்னாவ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதனால் அனைத்துக் குற்றங்களையும் அரசியல் ஆதாயமாகப் பார்க்கிறார்கள்.

இங்கு குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறை எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது 9 மாதங்கள் வரை போலிஸார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.