India

“என்கவுன்டர் செய்த தெலங்கானா போலிஸார் மீது நடவடிக்கை கூடாது” - நிர்பயாவின் தாயார் பேட்டி!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி இரவு பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிரியங்கா வன்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்; பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், கால்நடை மருத்துவர் பிரியங்கா வன்கொலை வழக்கில் முகமது பாஷா, சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும், இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று போலிஸார் விசாரிக்க முயற்சிக்கும்போது அவர்கள் தப்பியோட முயற்சித்ததால் போலிஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இந்த என்கவுன்டர் சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது.

இந்நிலையில், டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, தெலங்கானா போலிஸாரின் இந்த என்கவுன்டரை வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போலிஸார் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். என்கவுன்டர் செய்த போலிஸார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

இதேபோல் நிர்பயா வழக்கிலும் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்பட வேண்டும் என நாட்டின் நீதித்துறையையும் அரசையும் கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை போலிஸார் என்கவுன்டர் செய்தது எப்படி?" : பரபர தகவல்கள்!