India

“4 ஆண்டுகளில் வெறும் 3.3% தான்” - வேலை உருவாக்கத்தில் தோல்வி கண்ட மோடி அரசு” : ஆய்வு நிறுவனம் தகவல்!

இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த காலங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் வேலைவாய்ப்புகள் பற்றி கேர் ரேட்டிங்ஸ் (CARE Ratings) என்ற மதிப்பீட்டு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதுள்ள 1,938 நிறுவனங்களில் இந்த ஆய்வை கேர் ரேட்டிங்ஸ் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், 2014 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் நாட்டில் ஜி.டி.பி 7.5 சதவீதமாக இருந்த நிலையில், 2014-15 முதல் 2018-19ம் ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெறும் 3.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில், 2017-18ஆம் ஆண்டில் 3.9 சதவீதம் என்பது குறைந்து 2018-19ம் ஆண்டில் 2.8 சதவீதம் என்ற அளவுக்குச் சென்றுள்ளது.

மேலும், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இணையாக வேலைவாய்ப்புகள் இருந்திருக்கவேண்டும், ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் அப்படிப்பட்ட நிலையில் இந்தியா இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த வேலைவாய்ப்பு உருவாக்கம் இல்லாமல் போனதற்கு உள்கட்டுமானத் துறையின் பின்னடைவே காரணம் என்றும், பொருளாதார சரிவு, வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை போன்றவற்றால் தான் வேலை உருவாக்கத்தில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதில் கச்சா எண்ணெய் துறையில் மட்டுமே வேலை உருவாக்கத்தில் சிறிய வளர்ச்சி இருந்ததாகவும் கூறியுள்ளது. மேலும் வேளாண் துறை, வீட்டு உபயோகப் பொருட்களுக்கான உற்பத்தி துறைகளில் வேலை உருவாக்கம் மந்தமாக இருந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்ததாக சுட்டிக்காட்டியது.

நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு மேம்படுத்தியுள்ளதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்ளும் பா.ஜ.க-வினருக்கு இந்த புள்ளிவிவரம் நிச்சயம் கலக்கத்தை எற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துவருகின்றனர்.

Also Read: “45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 3 ஆண்டுகளில் படுமோசம்” : பா.ஜ.க ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு!