India

சபரிமலைக்குச் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்த பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என கடந்த ஆண்டு அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது உச்ச நீதிமன்றம். இதனை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு விசாரணையை மாற்றி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

இருப்பினும், ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பில் எந்த மாறுதலும் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்களை அனுமதிக்காமல் கேரள போலிஸார் நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதில் வழக்கம் போல லட்சக்கணக்கான ஆண்கள் பதிவு செய்திருக்கும் நிலையில், பெண்கள் 319 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 319 பேரும் 15 முதல் 45 வயது உடையவர்கள் ஆவர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களே முன்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 139 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.