India

குறைந்து வரும் வரி வருவாய் - நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல் மோடி அரசு பரிதவிப்பு!

மத்திய அரசின் நிதி அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அந்த நிதியாண்டில் எவ்வளவு ரூபாய் நேரடி மற்றும் மறைமுக வரியாக பெறவேண்டும் என இலக்கு நிர்ணயிப்பார்கள்.

அதன்படி, பிப்ரவரி மாதம் நடந்துமுடிந்த இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது, நடப்பு நிதியாண்டு 2019-20ல் வரிவருவாய் 13.80 லட்சம் கோடி ரூபாயாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் பொருளாதார மந்தநிலையால் வரிவருவாய் தொடர்ச்சியாக குறைந்து வந்தது. அதனால் ஜூலை மாதம் வெளியான பட்ஜெட் அறிக்கையின் போது, வரி வருவாயின் இலக்கை 1.35 லட்சம் கோடி ரூபாயாக மோடி அரசு குறைத்தது.

இலக்குகளை குறைத்து வந்தாலும் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலேயே வசூலாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான இந்த 7 மாதத்தில் நேரடி வரி வருவாய் வெறும் 5 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டுள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி 17 சதவீதமாக இருந்திருக்கவேண்டும்.

அதேப்போல் ஜி.எஸ்.டி வரி வருவாய் இலக்கு 15 சதவீதம் என இருந்த நிலையில் தற்போது 12 சதவீதமாக உள்ளது. வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மோடி அரசு வரி தாக்கல் நடைமுறைகள் மாற்றியமைத்து போதிலும் வரி வருவாய் மந்தமாக இருப்பதாகவே வரித் துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் கார்பரேட் வரி குறைப்பு நடவடிக்கையினாலும், நிலவி வரும் பொருளாதார மந்தநிலைக் காரணமாகவே வரி வசூல் கடினமான சூழலில் இருப்பதாக வருமான வரித் துறையினர் கூறிவருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் வரி வசூலில் மந்த நிலை இருப்பதால் மீண்டும் வரி வசூல் இலக்கை 1 லட்சம் கோடி வரையில் குறைக்க வேண்டும் என்று அரசிடம் வருமான வரித் துறைக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Also Read: “5.6% குறைந்த ஜி.டி.பி”: மோடி ஆட்சியில் பொருளாதார மந்தநிலை நீண்ட காலம் நீடிக்கும்: - மூடிஸ் எச்சரிக்கை!