India

நாள்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூ10,000 உதவித் தொகை- ஜெகன் மோகன் ரெட்டியின் அறிவிப்புக்கு குவியும் பாராட்டு

ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. ஆட்சிக்கட்டிலில் ஏறிய நாள் முதல் இன்று வரை ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர மாநில மக்கள் நலனுக்காக நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியும் செயல்படுத்தியும் வருகிறார்.

அந்த வகையில் நீண்ட காலமாக தீராதா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாதாமாதம் பென்ஷன் வழங்கும் புதிய திட்டத்திற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது ஜெகன் மோகன் அரசு.

அதில், தலசீமியா, அனிமீயா, ஹீமோஃபீலியா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களின் மருத்துவச் செலவுக்காக மாதம் ரூ.10,000 உதவித் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நரம்பு மண்டல பிரச்னையால் நடமாட முடியாமல் இருப்பவர்களுக்கும், சிறுநீரக பாதிப்படைந்தவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உரியச் சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு விண்ணப்பிக்க உரிய மருத்துவ பரிசோதனைக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு நோயாளிகளுக்கும் பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. பொதுமக்களும் முதலமைச்சரின் திட்டங்களுக்கு அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் பயோபிக்காக உருவாகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதில், கோ, அஞ்சாதே படங்களில் நடித்த அஜ்மல் ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.