India

தனியாரில் பணிபுரியும் பெண்களுக்கும் பேறுகாலத்தில் ஊதியத்துடன் விடுமுறை திட்டம் : அசத்தும் பினராயி விஜயன்

கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின், அரசு சார்ந்த ஒவ்வொரு முடிவுகளும், திட்டங்களும் மாநிலங்கள் தாண்டி பாராட்டுகளை பெற்று வருகின்றன.

அந்த வகையில் தனியார் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் அரசு உதவிபெறாத கல்லூரி நிலையங்களில் பணி புரியும் பெண் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாகத் தனியார் கல்வி நிறுவங்களில் பணியாற்றும் பெண்கள் தங்கள் பேறுகால காலத்தில் விடுமுறை எடுப்பதற்காக பேறுகால அனுகூலச் சட்டத்தை கொண்டுவர முடிவு எடுத்து மத்திய அரசின் அனுமதியும் பெற்றுள்ளது.

இதன் மூலம் மாநிலங்களில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் பெண்கள் பயனடைவார்கள் என முக்கிய அமைச்சர்கள் கூறுகின்றனர். தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு பிரசவகாலத்தில் விடுமுறை அளிப்பதில்லை என்றும், விடுமுறை அளித்தாலும் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இந்த புகாரை ஆட்சிக் காலத்தில் சரி செய்யப்படும் என தேர்தல் பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வாக்குறுதி அளித்தது.

அதனடிப்படையில், கேரள அரசின் அமைச்சரவை கூடி இந்த சட்டத்தை அமல்படுத்த அனுமதி கோரிய கடிதம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதற்கான அனுமதிதான் தற்போது கிடைத்துள்ளது.

மேலும் இந்த சட்டத்தில் முக்கிய அம்சம் என்னவெனில், மகப்பேறுகாலத்தில் பெண்களுக்கு உதியத்துடன் 26 வாரங்கள் விடுமுறை அளிக்க வழிவகை செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணின் சிகிச்சைக்காக தனியார் கல்வி நிறுவங்களே ரூ.1000 உதவி தொகை வழங்கவேண்டும்.

முன்னதாக அரசு நிறுவனங்களில் பணியாற்றிய பெண்களுக்கு பொருந்தும். தற்போது இந்தச் சட்டம் தனியார் நிறுவனங்களில் உள்ள பெண்களுக்கும் பொருந்தும் வகையில் மாற்றம் கொண்டுவரபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் பிரசவம் முடிந்து குழந்தைகளோடு வீட்டிற்குச் செல்லும் பெண்களுக்கு இலவச டாக்ஸி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளார் பினராயி விஜயன். இந்தத் திட்டத்திற்கு கேரள மக்கள் மட்டுமில்லாது பல்வேறு மாநில மக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.