India

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆகிறாரா ஏ.பி சாஹி ? - கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த விஜயா கம்லேஷ் தஹில் ரமாணி இந்த பரிந்துரைக்கு ஆட்சேபனை தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பினார்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர் உயர்நீதிமன்றத்திற்கான பொறுப்பு தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை நியமித்து கடந்த செப்டம்பர் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

தஹில் ரமாணி

கொலீஜியத்தின் பரிந்துரைப்படி,மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொலிஜியம் தனது பரிந்துரையை மாற்றி அமைத்துள்ளது.

கொலீஜியத்தின் தனது புதிய பரிந்துரையில், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக நியமிக்கவும், தற்போது பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி அவர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஏ.பி.சாஹி

கொலீஜியத்தின் பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்தால் ஆராயப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏ.பி.சாஹி அவர்கள் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.