India

“பா.ஜ.க ஆட்சியில் சில்லரை வர்த்தகம் படுமோசம்” : 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !

இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் சில்லரைப் பணவீக்க விகிதம் கடந்த 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “சில்லரை விலை பணவீக்கம் கடந்த செப்டம்பரில் 3.99 சதவிதமாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், சில்லரைப் பணவீக்க விகிதம் 3.21 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது, 0.78 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் பிரிவுகளில், உணவுப் பொருட்கள் பணவீக்கமே முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்த வகையில், செப்டம்பரில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்ததே, சில்லரைப் பணவீக்க உயர்வுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 2.99 சதவிகிதத்தில் இருந்து, செப்டம்பரில் 5.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2019-20 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4 சதவிகிதத்தை தாண்டிவிடக் கூடாது என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், 9 மாதங்களுக்கு உள்ளாகவே பணவீக்க விகிதம் 3.99 சதவிகிதத்தை எட்டியுள்ளது.14 மாதங்களில் இல்லாத அளவு என குறிப்பிடப்பட்டுள்ளது.