India

12 ஆண்டுகளாக நாணயங்களைச் சேர்த்து வந்த ராஜஸ்தான் சிறுவன் - எதற்கு தெரியுமா? - ஒரு நெகிழ்ச்சிக் கதை!

ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள சஹாரான் நகரைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன் ராம்சிங். இவர், கடந்த 2007ம் ஆண்டு தன்னுடைய அம்மாவின் பிறந்தநாளன்று வெளியான செய்தித்தாள் ஒன்றில் குளிர்சாதனப் பெட்டி தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த சமயம், ராம்சிங்கின் அம்மாவும் புதிதாக ஃபிரிட்ஜ் ஒன்று வாங்கவேண்டும் எனக் கூறிவந்துள்ளார்.

அதனை மனதில் வைத்துக்கொண்டு கடந்த 2007ம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆண்டுகளாக தனக்குக் கிடைத்த 1, 2 510 ரூபாய் நாணயங்களை சிறுக சிறுக வீட்டில் உள்ள உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். உண்டியல் முழுதும் நிரம்பிய பின்னர், அதனை தன் அம்மாவிடம் தெரிவிக்க வேண்டும் என நினைத்து சேமிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார் ராம்சிங்.

அவ்வாறு சேமித்து வைத்த நாணயங்களின் எடை 35 கிலோவுக்கு 13,050 ரூபாய் வந்துள்ளது. சரியான நேரம் பார்த்து தனது அம்மாவை அழைத்துக்கொண்டு ஷோரூமுக்கு சென்றுள்ளார் ராம்சிங். அங்கு ஃபிரிட்ஜை தேர்வு செய்த பின்னர், விலையில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் குறைவாக இருந்துள்ளது.

ஆனால் தனது அம்மா மீது ராம் சிங் வைத்திருந்த அன்பை கண்டு நெகிழ்ந்த கடைக்காரர்கள் அந்த 2,000 ரூபாயை தள்ளுபடியாக வழங்கி 13,500 ரூபாய்க்கே குளிர்சாதனப் பெட்டியை வழங்கியுள்ளனர். மேலும், ராம்சிங் கொண்டு வந்த 35 கிலோ எடையுள்ள நாணயங்களை எண்ணுவதற்கே 4 மணிநேரம் ஆனதாகவும் கடையில் உள்ளவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

காசு கொடுக்காததால் பெற்ற தாயை கொலை செய்யவே துணியும் மகன்களுக்கு மத்தியில் தனது அம்மாவுக்காக சிறுகச் சிறுக காசு சேர்த்து ஃபிரிட்ஜ் வாங்கிக் கொடுத்த ராம்சிங்கின் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.