India

“ரஃபேல் விமானத்தை வைத்து நாடகம் போடுகிறது பா.ஜ.க அரசு” - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இந்திய விமானப்படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன் 2016ம் ஆண்டு 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, பிரான்ஸ் நாட்டின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும் போர் விமானங்களில் முதல் விமானம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானத்தைப் பெற்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்த ராஜ்நாத் சிங், ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில் விமானத்தைப் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக, ரஃபேல் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜை நடத்தினார். ரஃபேல் விமானத்திற்கு சந்தனப் பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் ஆகியவற்றை வைத்து, ஓம் என்று இந்தியில் எழுதினார் ராஜ்நாத் சிங்.

ரஃபேல் விமானத்துக்கு கயிறு கட்டி, டயருக்கு அடியில் எலுமிச்சைப் பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது. ராஜ்நாத் சிங்கின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளானது. போர் விமானங்களுக்கு சாஸ்திர, சம்பிரதாயமெல்லாம் தேவையா என மக்கள் கேள்வியெழுப்பினர்.

ராஜ்நாத் சிங்கின் செயலுக்கு காங்கிரஸ் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “ரஃபேல் விமானத்தை வைத்து மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. போபர்ஸ் போன்ற பீரங்கிகள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுபோன்று அமைச்சரே நேரில் சென்று வாங்கியதில்லை. இதுபோன்ற பூஜை எதுவும் செய்ததில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.