India

இஸ்ரோ விஞ்ஞானி அடித்துக்கொலை : பூட்டிய வீட்டிற்குள் நடந்த கொடூரம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவர் ஐதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் துணை மையமான தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தேசிய தொலை நிலை மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றிவர்.

இவரது மனைவி இந்திரா சென்னையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வெளிநாட்டில் உள்ளார். இதன்காரணமாக நீண்ட காலமாக சுரேஷ் மட்டும் தனியாக ஐதராபாத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் வீட்டில் பணிபுரியும் பெண், வழக்கம்போல் வீட்டிற்கு வந்திருக்கிறார். வீடு பூட்டப்பட்டு இருந்தால் சுரேஷ் வீட்டில் இல்லையென நினைத்து திரும்பிச் சென்றுள்ளார்.

பின்னர், சுரேஷ்டன் பணிபுரியும் நண்பர், வழக்கமான நேரத்தில் வேலைக்கு வராதால் சுரேஷ்க்கு செல்போனில் தொடர்புக் கொண்டுள்ளார். ஆனால் போன் எடுக்காததால் அவரது மனைவி இந்திராவுக்கு தொடர்புக்கொண்டு கேட்டுள்ளார். இதனையடுத்து இந்திரா வீட்டிற்கு வேலைக்கு செல்லும் பெண்ணிடம் காலையில் சுரேஷ் இருந்தாரா என செல்போன் மூலம் கேட்டார்.

வீடு பூட்டப்பட்டிருந்தது என்று கூறியதால் சந்தேகம் அடைந்த இந்திரா, ஐதராபாத்தில் உள்ள நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் எஸ்.ஆர்.நகர் போலிஸாருடன் வீட்டிற்குச் சென்றனர்.

சுரேஷ் குமார்

பின்னர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது. பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த இந்திரா நேற்று காலை ஐதராபாத்திற்கு வந்தார்.

போலிஸார் வழக்குப் பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில் கடந்த சில மாதங்களாக சீனிவாஸ் என்பவர் சுரேஷின் வீட்டிற்கு வருவதும், இருவரும் சேர்ந்து மது அருந்துவதும் தெரியவந்துள்ளது.

இதேபோல் கடந்த 30-ம் தேதி மாலை சீனிவாஸ் வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.