India

வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் கைது : சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பிறகே கைது செய்யவேண்டும் என்றும் கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையில், அமைந்துள்ளதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகளும், போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதில் சிலர் உயிரிழந்தனர். இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு,  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது.

அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது. அதேசமயம் உச்சநீதிமன்றத்  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் வாதங்கள் கடந்த மாதம் 18ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் அமர்வில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில், வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஒருவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் படி அந்த நபரை உடனடியாக கைது செய்யக்கூடாது என்ற தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.