India

“விற்பனையும் சரிவு; ஏற்றுமதியும் சரிவு” : பாஜக ஆட்சியால் திவாலாகும் நிலையில் மாருதி சுசுகி! #ShockReport

பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற அக்டோபர் 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக கடந்த மாதம் அறிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆனாலும் தற்போது வரை நிலைமை சரியாகாததால் பெரும் தேக்கநிலையை அடைந்துள்ளது மாருதி சுசுகி. குறிப்பாக இன்றைய தினம் செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான கார் விற்பனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டும் 1,62,290 கார்களை விற்றுள்ளனர். ஆனால் தற்போது, 1,22,640 கார்களை மட்டுமே விற்க முடிந்ததாகக் கூறியுள்ளனர்.

அதேபோல் உள்நாட்டில் கடந்த செப்டம்பர் 2018ம் ஆண்டு 1,53,550 வாகனங்களை விற்றுள்ளதாகவும், ஆனால் தற்போது செப்டம்பர் 2019-ல் வெறும் 1,12,500 கார்களை மட்டுமே விற்றுள்ளதாகக் கூறியுள்ளனர். இதன் மூலம் உள்நாட்டு விற்பனை மதிப்பில் சுமார் 26 சதவிகித அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது மாருதி சுசுகி.

மாருதியின் ஆல்டோ, வாகன் ஆர், எஸ்-பிரெஸ்ஸோ போன்ற சிறிய ரக கார்கள் விற்பனையும் 42.6 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது, புதிய வாகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விஃப்ட், டிஸையர், பலேனோ கார்கள் விற்பனை 22.7 சதவிகித அளவுக்கு குறைந்தன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளனது.

இதற்கு முன்னதாக சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் சில கார்களின் விலையை 5 ஆயிரம் ரூபாய் வரை குறைத்தது. ஆனாலும் விற்பனை பெரிய அளவில் நகரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் மாருதி நிறுவனம் திவாலாகும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.