India

இளம் பெண்களின் வலையில் வீழ்ந்த வி.ஐ.பிகள் - அந்தரங்கத்தை ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த கும்பல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் கடந்த வாரம் தன்னை ஒருகும்பல் பாலியல் வீடியோ எடுத்து பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் சிறப்பு குழு அமைத்து விசாரணையை தொடங்கினார்கள்.

அந்த விசாரணையில், ஸ்வேதா ஜெயின் என்ற பெண் உட்பட 6 பேரை கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் போலிஸாருக்கு பல அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வேதா ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது ஸ்வேதா ஜெயின் அளித்த வாக்குமூலத்தில், பல மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், அதன் மூலம் வி.ஐ.பி-களை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமின்றி சிறப்பு விசாரணைக் குழு போலிஸார், ஸ்வேதா ஜெயினிடமிருந்து மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களைக் கைபற்றியுள்ளனர். அந்த வீடியோவில் இருப்பவர்களின் பெரும்பான்மையானவர்கள் மத்திய பிரதேசத்தின் முக்கிய வி.வி.ஐ.பிகள்.

40-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார் ஸ்வேதா ஜெயின். இந்த தொழிலுக்கு பெரும்பாலும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி மூளைச் சலவை செய்து மிரட்டியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களை வைத்து மாநிலத்தின் முக்கிய வி.வி.ஐ.பி-க்களை சிக்க வைத்து பணம் பறிக்க முடிவு செய்துள்ளார். அதன் மூலம் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்களை அனுப்பி அவர்கள் மூலம் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளார்.

குறிப்பாக மூக்கு கண்ணாடி, லிப்ஸ்டிக் போன்றவற்றில் கேமராக்களை பொருத்தி வீடியோ எடுத்ததும் தெரியவந்துள்ளது. பின்னர் அந்த வீடியோக்களை விவிஐபிக்களுக்கு அனுப்பி, குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனுப்புவதாகவும் இணையதளத்தில் வெளியிட இருப்பதாகவும் மிரட்டி பல லட்சம் கோடிகள் பணம் பறித்துள்ளார்.

அவருக்கு துணையாக 6 பேர் கொண்ட கும்பல் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுபோல பணம் பறித்தே ஸ்வேதா ஜெயின் சில மாதங்களில் கோடிஸ்வரராக மாறியிருக்கிறார். அதன்மூலம், அரசியலில் சிலரின் ஆதரவு பொற்று செல்வாக்குள்ளவராக ஸ்வேதா ஜெயின் வலம் வந்துள்ளார்.

அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து எச்சரித்த ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அளவிற்கு அரசின் ஆதிக்கசக்தியாக மாறியிருக்கிறார். இதற்கு மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் உடந்தையாக இருந்தாகக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இவரின் பிடியில் 12 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் 8 முன்னாள் அமைச்சர்கள் சிக்கியுள்ளதாகவும் அவர்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர். மேலும் இதில் தொடர்புள்ளவர்கள் மீது காவல் துறை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.