India

4 மணிநேரத்தில் 6 பேரிடம் வழிப்பறி : கேரளாவிலும் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசை - திடுக்கிடும் தகவல்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் பூட்டிக் கிடக்கும் வீட்டுக்குள் புகுந்து லட்சக் கணக்கில் பணம், நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் வடமாநில கொள்ளையர்கள் தற்போது கேரளாவிலும் கிளை பரப்பியுள்ளனர்.

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில் வெறும் நான்கே மணிநேரத்தில் 6 வெவ்வேறு பகுதிகளில் 6 பேரிடம் மிரட்டி நகைகளை பறித்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகையை பறிகொடுத்தவர்களிடம் கொல்லம் மாவட்ட போலிஸார் விசாரணை நடத்தியதில், பைக்கில் வந்த இளைஞர்கள் இருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்களிடம் இருந்த நகைகளை பறித்துச் சென்றதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் பயன்படுத்தியது துப்பாக்கி அல்ல, கட்டடங்களுக்கு துளையிட பயன்படுத்தும் ட்ரில்லிங் மெஷின் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இருவரும் கட்டட வேலைக்காக வந்திருக்கும் வட மாநிலத்தவர்கள் என்றும், கொள்ளையடிப்பதற்காக பயன்படுத்திய பைக்கும் குந்தாரா ரயில் நிலையத்தில் இருந்து திருடப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளனது.

அதன் பிறகு, வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலிஸார் தேடி வருகின்றனர். இந்த தொடர் கொள்ளை நிகழ்வுகள் கொல்லம் மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.