India

ராணுவத்தினர் அராஜகம்; பெண்கள் நடமாட முடியாமல் தவிப்பு; காஷ்மீரின் தற்போதைய நிலையின் அதிர்ச்சி தகவல்!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 50 நாட்களுக்கு மேலாகியும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுபோல எந்த ஒரு அசம்பாவித சம்பவம் நடக்காததுப்போல் பா.ஜ.க-வினர் ஊடகங்களில் தம்பட்டம் அடித்துவருகின்றனர். அதையே பெரும்பாலான ஊடகங்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்கு, பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம், பிரகதீஷீல் மஹிலா சங்காதன் ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினர் சயிதா ஹமீத் அகியோர் அடங்கிய பெண்களின் உண்மை அறியும் குழு அங்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, பிரதமர் மோடி ஐ.நா பொது சபையில் பேசுவதற்கு முன் தினம் பெண்களின் உண்மை அறியும் குழு ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டிருந்ததாவது, “கடந்த வாரம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் சென்றிருந்தோம்.

அங்குள்ள பையன்களை ராணுவத்தினர் அவர்களின் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதாகவும், இவர்களை மீட்பதற்காக இவர்களது பெற்றோர் சென்றால் அவர்களிடம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை ‘டெபாசிட்’ கட்டுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள் என்று தங்களிடம் ஒரு பெண்மணி கூறியதாகவும் அக்குழுவினர் தெரிவித்தார்கள்.

மேலும், ராணுவத்தினர் ஒரு வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர். அங்கே தந்தையும் மகனும் என இருவர் மட்டும் இருந்திருக்கின்றனர். அவர்களை விசாரணைக்காக இழுத்துச் சென்றுள்ளனர். அன்றிலிருந்து அவர்கள் அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

குறிப்பாக, 14 முதல் 15 வயது பையன்கள் அவரவர்களின் வீடுகளிலிருந்து இழுத்துச்செல்லப்பட்டு, சித்ரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்த நிலைமை கடந்த 45 நாட்களாகவே நீடிக்கிறது. இத்தகைய சித்ரவதைக்கு அங்குள்ள மக்கள் உள்ளாகி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாது, இளம் பெண்கள், தங்களிடம் தங்களை ராணுவத்தினர் பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறியுள்ளார்கள். குறிப்பாக தங்கள் பர்தாவை நீக்க சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

மருத்துவர்கள், சிகிச்சை கோருபவர்களுக்கு சிகிச்சையளித்திட நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை இருக்கிறது. தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் அனைத்து பிரதான சாலைகளிலும் தடுப்பரண்கள் இருப்பதால் இவர்களால் உரிய நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை நீடிக்கிறது” என குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், “கடந்த 50 நாட்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டபின் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படவேண்டும். ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் அம்மாநிலத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

ராணுவத்தினர் – துணை ராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொலைத்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்” என பெண்கள் உண்மை அறியும் குழுவினர் கோரி வைத்துயுள்ளனர்.