India

“கேரளாவில் ஏன் மோடியால் ஜெயிக்க முடியவில்லை? இதுதான் காரணம்” : பாலிவுட் நடிகர் அதிரடி பதில்!

நாடு முழுவதும் வடமாநிலங்களில் பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது பா.ஜ.க. தென்மாநிலங்களில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாமல் போனது. இதற்கு இந்த இருமாநிலங்களிலும் உள்ள பிரதான எதிர்க்கட்சிகளே காரணம் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் அவரிடம் “உங்கள் சொந்த மாநிலமான கேரளாவில், பிரதமர் மோடிக்கு ஏன் செல்வாக்கு இல்லை?” என்று கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய நடிகர் ஜான் ஆபிரகாம், “கேரளத்தில், மோடியால் ஏன் இன்னும் ஜெயிக்க முடியவில்லை எனக் கேட்கிறீர்கள். சொல்லப்போனால் அதுதான் கேரளத்தின் அழகு. கேரளாவில் ஒவ்வொரு 10 அடி இடைவெளியிலும் ஒரு இந்து கோயில், மசூதி, தேவாலயம் இருக்கும். அவை மூன்றையும் அங்கு பார்க்க முடியும். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் அமைதியாக வழிபாடு நடக்கும்.

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்

உலகமே இன்று முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு கேரளம் தான். எல்லா மதங்களும், இனங்களும் ஒரே இடத்தில் அமைதியாக வாழமுடியும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் கேரளம்தான்.

அதுமட்டுமல்ல, கேரளா ஒரு கம்யூனிச மாநிலம். ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்தபோது கேரளத்தில் அவருடைய பதாகைகளை ஏந்தி பலர் இரங்கல் செலுத்தியது என் நினைவில் இருக்கிறது. எனது சிறுவயதில் கார்ல் மார்க்ஸ் பற்றிய புத்தகத்தை கொடுத்து எனது தந்தை படிக்கச் சொன்னார்.

கேரளத்தில் ஒவ்வொரு மலையாளிக்குள்ளும் ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறான். சமத்துவமான வாழ்க்கை, சமமான பொருளாதார பங்கீடு ஆகியவை தான் எங்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் ஜொலிக்கும் கோயில் தான் கேரளா” என அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு ஜான் ஆபிரகாம், அரசியல் சார்ந்த கருத்துகளைத் தெரிவித்தது இல்லை. ஆனால், தற்போது ஒரு கேள்வியின் மூலம் ஜானின் அரசியல் பார்வை வெளிப்பட்டுள்ளது.