India

“இந்தியை திணித்தாக வேண்டும் என அவசர கதியில் செயல்பட்டு அல்லல்படுகிறது பா.ஜ.க” : கே.எஸ்.அழகிரி சாடல்! 

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்வதற்காக இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கல்வித்துறை மூலம் சமஸ்கிருதம் மற்றும் இந்தியை திணிக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் பகவத் கீதையை பாடமாக வைக்கவேண்டும் என பா.ஜ.க திட்டம் தீட்டுகிறது.

தத்துவப்படிப்பை கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமானால் வைக்கலாம். பொறியியல் மாணவர்களுக்கு பொறியியல் குறித்த ஞானம்தான் வேண்டுமே தவிர பகவத் கீதை தேவையில்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் பா.ஜ.க செயல்பட்டு அல்லல்படுகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கள்ளநோட்டு பயன்பாட்டை அழிக்கவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை என மோடி அரசு சொன்னது. ஆனால் நாகர்கோவில் மார்த்தாண்டத்தில் 75 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளது என சுட்டிக்காட்டி இதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை பா.ஜ.க அரசு சீர்குலைத்து வருகிறது” என கே.எஸ் .ழகிரி சாடியுள்ளார்.