India

சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம் இயற்றப்படும் - ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்!

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பேஸ்புக், வாட்சப்பிற்கு ஆதார் கட்டாயமாக்க கோரி வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றும் இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வத்தது. அப்போது, மக்கள் தங்கள் கருத்துகளை பகிர ஒரு தளம் அமைத்து கொடுத்துவிட்டு, அதில் பரப்பப்படும் தவறான தகவல்களுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்சப் நிறுவனம் கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வாட்சப் நிறுவனத்திற்கு உலகளவில் ஒரு சட்டம் இருந்தாலும், இங்கு இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் சமூக வலைதளங்கில் பரப்பப்படும் தவறான தகவல்களால் பல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

காட்சி ஊடகங்களை கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் அமைப்பு இருப்பதை போல, சமூக வலைதளங்களை கட்டுபடுத்த எந்த அமைப்பு இருக்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞர், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும், தவறான தகவல்களை கண்டறியவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும், தற்போது அது அரசின் இறுதி முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை போல வாட்சப் நிறுவனம் வழங்குவதில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.