India

“அரசு மருத்துவர்கள் இனி தனியாக கிளினிக் நடத்தக்கூடாது” : ஆந்திர அரசு அதிரடி உத்தரவு!

ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் இனி தனியார் கிளினிக்குகள் நடத்தக்கூடாது என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு உத்தரவின் பேரில் மருத்துவ நிபுணர் குழு, மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை பரிந்துரை செய்தது. இதையடுத்து, பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, அரசு மருத்துவர்கள் யாரும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றவோ, தனியாக கிளினிக்கோ நடத்தக்கூடாது என தெரிவித்தார்.

மேலும், ஆந்திர மாநில அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ மருத்துவ அட்டை வைத்திருக்கும் ஏழைகளுக்கு மருத்துவ செலவு ரூபாய் 1,000-ஐ தாண்டினால், அதற்கு மேற்பட்ட செலவுகள் அரசால் ஏற்கப்படும் என்றும், இத்திட்டம் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்வோரின் குடும்பத்தினருக்கு, நோயாளி குணம் அடையும் வரை மாதம் ரூபாய் 5,000 நிதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டால், மக்கள் தானாக அரசு மருத்துவமனைகளை நாடி வருவார்கள். அதேபோல, அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவம் பார்ப்பதும் தடுக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.