India

திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம்!

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, நாடு முழுவதும் வருவாய்த் துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற சோதனையில், தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது ரூ.131 கோடி அளவிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், ரூ.30 கோடி அளவு புதிய 2000 நோட்டுகள் ஆகும்.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சேகர் ரெட்டி. அவர் கைது செய்யப்பட்ட போது, அவர் திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழுவில் தமிழகத்தின் சார்பில் உறுப்பினராக இருந்தார். சிறைக்கு சென்றதால், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

3 ஆண்டுகள் வழக்கு நடந்த நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் அவர் சட்டபூர்வமான சம்பாதித்ததாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப் பட்டார். ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில நாட்களில் சேகர் ரெட்டியின் வீட்டில் எப்படி 30 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வந்தது என்பதற்கான விளக்கம் சி.பி.ஐ தரப்பில் கூறப்படவில்லை.

இந்நிலையில், தமிழகம் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டியை ஆந்திர அரசு மீண்டும் நியமித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள திருப்பதி தேவஸ்தான குழுக்களின் தலைவராகவும் சேகர் ரெட்டி செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு புதிதாக பதவியேற்ற தலைவரை, சேகர் ரெட்டி நேரில் சந்தித்து வாழ்த்தியபோதே சேகர் ரெட்டிக்கு இந்தப் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டு வந்தது.