India

“ஓலா – ஊபர் தான் காரணமா? நிதியமைச்சர் உண்மையை ஆராய்ந்து கூறவேண்டும்” : மாருதி சுசுகி இயக்குனர் அறிவுரை!

இந்திய தொழில் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு துறை. இந்தத் துறையில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்ப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2017ம் ஆண்டு ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகள் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தன. ஆனால் 2018ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்தது. மிகக் குறுகிய காலகட்டத்திலேயே சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் 20 சதவீத அளவிற்கு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் நடப்பு நிதியாண்டில் 18.4 சதவீத அளவிற்கு வாகன விற்பனை எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் இது முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கான வர்த்தக பேரிழப்பு எனவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான வீழ்ச்சிக்கு ஓலா – உபர் போன்றே நிறுவனங்களேக் காரணம். இளம் தலைமுறையினர் ஓலா, ஊபர் போன்ற தனியார் நிறுவன வாடகை கார்களை அதிக அளவில் பயன்படுத்துவதுதான் மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவுக்குக் காரணம்” என்று கூறினார்.

அவரின் இந்த பேச்சு, தெளிவுள்ளாமல் இருப்பதாகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் பொருளாதார வல்லூநர்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவன அதிகாரிகள் கருத்து தெரிவித்துவந்தனர். பலரும் உண்மையான காரணங்களைக் கூட கண்டுபிடிக்க தெரியாத அளவிற்கு நிதியமைச்சர் செயல்படிகின்றாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு வாகன உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமாக இயங்கிவரும் மாருதி சுஸுகி-யின் இந்திய இயக்குனர் சஷாங் ஸ்ரீவஸ்தா பதில் அளித்துள்ளார். இதுதொர்பாக அவர் கூறியதாவது, “இந்தியாவில் ஓலா – ஊபர் நிறுவனங்கள் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுவருகின்றனது.

ஆனால் அப்போதெல்லாம் இதுபோல மந்தநிலை உருவாகவில்லை. இந்த பொருளாதார நெருக்கடியால் உருவாகியுள்ள விற்பனைச் சரிவு கடந்த ஆண்டும் முதலே தொடங்கிவிட்டது. அதன் வீரியம் நடப்பு நிதி ஆண்டில் இருந்துதான் வெளிவந்துள்ளது.” என்றார்.

சஷாங் ஸ்ரீவஸ்தா

மேலும், "ஓலா - ஊபர் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தப் போது அதிமான இளைஞர்கள் அதில் இணைந்து தங்கள் பணிகளை தொடங்கினார்கள். அப்போது இந்தியாவில் வாகனத்துறையின் நல்ல வளர்ச்சியை நோக்கிதான் சென்றது.

அதனால் தற்போது ஏற்பட்டுள்ள மந்தநிலைக்கு ஓலா – ஊபர் மட்டுமே காரணம் எனக் கூறுவது சரியாகது, அதுமுழுமையானதும் கூட இல்லை. எனவே உண்மையான காரணம் என்ன என்பதனை ஆராய்ந்து கூறவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் ஆதரவு அளித்தனர். முன்னதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த மந்த நிலைமையைச் சரிசெய்ய எடுக்கவேண்டிய முக்கிய ஐந்து நடவடிக்கையையை மோடி அரசுக்கு பரிந்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.