India

மக்கள் கொந்தளிப்பின் எதிரொலி - அபராதத் தொகையை மாநிலங்கள் குறைத்துக் கொள்ளலாம் என நிதின் கட்கரி அறிவிப்பு!

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும், சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய அபராத முறைகளை அமல்படுத்தியது.

இந்த புதிய அபராதம் விதிக்கும் முறை நாடெங்கும் செப்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகையை மாநில அரசுகள் விரும்பினால் குறைத்துக்கொள்ளலாம் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பது அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக அல்ல, போக்குவரத்து விதிமீறலை தடுப்பதற்காகவே கொண்டு வரப்ப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குஜராத் மாநிலத்தில் புதிய அபராத முறைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அபராதத் தொகையை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசும் அபராதத் தொகையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.