India

அதிகரிக்கும் செல்போன் பயன்பாடு : “தென் இந்தியர்கள் சொந்த மொழிக்கே முக்கியத்துவம்!” ஆய்வில் தகவல்!

தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் இந்த காலக்கட்டத்தில், பெரும்பாலன மக்கள் தங்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிக்கொள்ள செல்போனை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆன்லைனின் வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கிய இந்த வேலையில் மக்கள் பணபரிவர்த்தனைக்காவும், தகவல் தெரிந்துக்கொள்ளவும் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், கே.பி.எம்.ஜி மற்றும் ஈரோஸ் நவ் என்ற ஆய்வு நிறுவனம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், பூனே, அகமதாபாத், ஜெய்பூர், லூதியானா, பானிபட், நாக்பூர் மற்றும் மதுரை என 16 நகரங்களில் 1,458 நபரிடம் ஆய்வுகளை மேற்கொண்டது.

அதில், கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் தங்களுக்கு தேவையான தகவல்களை செல்போன் மூலம் தெரிந்துகொள்வதாகவும், அதில் 28 சதவீதம் பேர் அலுவலக நேரத்தில்தான் செல்போனை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெரும்பான்மையான வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைகளுக்குஇடையே அதிக நேரம் படம் பார்ப்பதாக கருத்துக் கணிப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஆன்லைன் வீடியோக்களை 70 நிமிடங்கள் பார்ப்பதாகவும் அதன்படி வாரத்தில் தொடர்ச்சியாக 12.5 முறை பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உலக நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சில வடிவ அமைப்பை கொண்டுள்ளதால் பெரும்பான்மை பார்வையாளர்களை அவர்களால் தக்கவைக்க முடிகிறது எனக் கூறியுள்ளது. குறிப்பாக அதில் 87 சதவீதம் மக்கள் தரமான தகவல்களை உடனுக்குடன் அல்லது அடிக்கடி பரிமாறும் ஆப்புகள், சேனல்களை பதிவிறக்கம் செய்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும் 30 சதவீதம் பேர் தான் விரும்பும் தகவல்களைத் தரும் மற்ற மொழிகளான இந்தி, ஆங்கிலம் போன்ற ஆப்புகளை இன்ஸ்டால் செய்து பார்ப்பதா தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் தென் இந்தியர்கள் தன் சொந்த மொழிக்கே முதல் முக்கியத்துவம் அளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.