India

ஆட்டோ விலை ரூ.25,000; ஆனால், அபராதம் ரூ.47,000 - டிராஃபிக் போலிஸிடம் சிக்கிய ஆட்டோ டிரைவர் புலம்பல்!

மத்திய பா.ஜ.க அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி அமல்படுத்தப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறிவோருக்கு முன்பிருந்ததை விட பன்மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோரைப் பிடித்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து ஹகன் என்பவர் டிராஃபிக் போலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

அப்போது மது போதையில் வாகனத்தை இயக்கியதாலும், உரிய ஆவணங்கள் இல்லாததாலும் ஹகனுக்கு ரூ.47,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர், என்னுடைய ஆட்டோவின் விலையே 25 ஆயிரம் தான், என்னால் எப்படி 47 ஆயிரம் ரூபாயை அபராதமாக கட்டமுடியும் எனப் புலம்பித் தீர்த்துள்ளார்.

மாதம் வெறும் 10 அல்லது 20 ஆயிரத்துக்குக் கீழ் சம்பாத்தியம் உள்ளவர்களால், போலிஸார் விதிக்கும் அபராதங்களை எவ்வாறு கட்ட முடியும் என அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் வாகன ஓட்டிகள். இதனையடுத்து, ஹரியானாவில் போக்குவரத்து போலிஸாரை கண்டாலே பதறியடித்துக்கொண்டு வாகன ஓட்டிகள் தெறித்து ஓடுகின்றனர்.

மேலும் சிலர், சாலைகளை முறையாக பராமரிக்காமல், சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்காமல், வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் போக்குவரத்து சீராகிவிடுமா என்றும் கேள்வி எழுப்பி தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.