India

“பல்கலைக்கழங்களில் அதிகரிக்கும் சாதிய பாகுபாடுகள்” உச்ச நீதிமன்றத்தில் ரோகித் வெமுலாவின் தாயார் வழக்கு!

பா.ஜ.க ஆட்சியில் கல்வி நிறுவனங்களில் மத பாகுபாடுகளும், சாதிய பாகுபாடுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் இந்துத்துவா கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் பாட புத்தகத்தில் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை திணிப்பது போன்ற நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கூட்டணி மறைமுகமாக செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஆர்.எஸ்.எஸ் கருத்தியல்களை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்களை வைத்தே சாதி பாகுபாட்டை மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழங்களில் சாதி பாகுபாடுகள் இருப்பதாகவும், அதைக் களைய நடவடிக்கை எடுக்க கோரியும் ரோகித் வெமுலா தாயாரும், மாணவி பாயர் தட்வியின் தாயாரும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அவர்கள் தொடர்ந்த மனுவில், “ பல்கலைக்கழங்களில் தற்போது தலித் மாணவர்கள் மீது சாதி அடிப்படையிலான தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தின் மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் அடிப்படை உரிமையை பரிக்கும் விதமாக உள்ளது. மேலும் இவை அனைத்தும், பல்கலைக்கழகத்தில் யூஜிசி விதித்துள்ள சமத்துவ விதிகளுக்கு எதிராக உள்ளது.

எனவே நாடுமுழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழங்களிலும் சாதி ரீதியாக நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் தடுக்கபட வேண்டும். அத்துடன் அனைத்து பல்கலைக்கழங்களில் சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு குழுவையும் நியமிக்க வேண்டும்” என அதில் கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் சாதி பாகுபாட்டால் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்டார்.

அதேப்போல் மருத்துவம் படித்த பாயட் தட்வி சாதி ரீதியான ஒடுக்குமுறையால் கடந்த மே மாதம் தற்கொலை செய்துக்கொண்டார். இவர்களின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக பாசிச அரசின் ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.